Sunday 30 June 2019

புரசின் மரணம்

ஒரு பெரிய ஊர் இருந்தது. வயலும் வரப்புமாக செழிப்பாக இருந்தது. அந்த ஊரருகே ஒரு பெரிய ஏரி இருந்தது. மக்களுக்கு அந்த ஊரையும் ஏரியையும் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. நாடு வளர்ந்தது, பொருளாதாரம் வளர்ந்தது கூடவே நகரமும் வளர்ந்தது. வளரும் நகரம் தன் பசிக்கு அருகில் இருந்த ஊர்களை எல்லாம் இரையாக்கிக் கொண்டது, அந்த ஊரும் புறநகர்ப் பகுதியானது. சிலருக்கு அது தொகுதியின் சிறு பகுதியானது.
       வயல்கள் பிளாட் ஆன போது யாரும் கவலைப்படவில்லை மாறாக கொண்டாடினார்கள். வாங்கியவர்கள் தனக்கென ஒரு வீடு என இன்புற்றனர். விற்றவர் பணம் பார்த்ததில் மகிழ்ந்தனர் (நகரம் வளர்ந்தது). உலகம் நாடோடியாய் இருந்த காலத்திலேயே நாகரீகம் வளர்த்த நாம் அதை எப்படியோ மறந்தோம்.  நீர் மேளாண்மையை சிதைத்து ஏரிகளை கழிவு நீர்த் தொட்டிகளாக்க முணைந்தோம். அப்படி அந்தப் பெரிய ஏரியும் சுருங்கியது நாறியது. வளரத் தொடங்கிய நகரம் இந்த ஊரையும் தாண்டி பன் மடங்கு வளர்ந்தது. அண்டத்தின் கருங்குழி(black hole) போல அதனுள் சிக்கிய யாரும் எதுவும் மீளாமல்போனது. இந்த ஊரும் அப்படியே காணாமல் போகும் என சிலர் ஆருடம் கூறினர்.
        ஆருடம் பொய்த்தது, மக்களின் மயக்கம் கலைந்தது. ஊரின் அடையாளமாய் ஏரியைக் கண்டனர். ஏரியை மீட்பதன் மூலம் ஊரை மீட்டெடுப்போம் என சூளுரைத்தனர். சிலர் ஏரியின் கரைகளை வளமாக்குவோம் என நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டனர் அவற்றைப் பிள்ளைகளாய் வளர்த்தனர். நன்கு வளர்க்கப்படும் பிள்ளைகள் என்றும் சோடம் போவதில்லை. அவையும் பல சவால்களைத் தாங்கி வளர்ந்தன. ஏரியின் கரையும் புன்னை, ஆலம், வாகை, வெண்ணாங்கு, நுணா, வெண் புரசு, சரகொன்றை, வெப்பாலை, புரசு என பல்வகை தாவரம் நிறைந்த நீர் வனமாக உரு பெற்றுக் கொண்டிருந்தது.
         மற்றும் சிலர் ஏரியின் உட்கரையையும் வளமாக்குவோம் என முனைந்து வண்டல் மண் அகற்றி தூர் வார முனைந்தனர். சிறு முயற்ச்சியாக தொடங்கியது பேரியக்கமாக மாறியது, நாடே வியந்தது. இப்போது நகரம் விழித்துக் கொண்டது. ஊரே எல்லாம் செய்து கொண்டால் நாம் எங்கே மணியடிப்பது என நகரை நகர்த்துவோர் முனைப்பாய் இறங்கினர்.தன் புஜ பல சேனைகளை ஏரியில் இறக்கி விட்டனர். கூலிப்படையிடம் கருணை எதிர் பார்க்கலாமா. மண்ணை அள்ளி கொட்டுவதற்குக் கூலி , கொட்டும் இடம் யார் தலையாக இருந்தால் என்ன.
            மூன்று வருடம் சிறப்பாக வளர்ந்து புரசு எனும் பிள்ளை செழிப்பாக நின்றிருந்தது. அது ஒரு அரிய வகை இந்நிலத்துக்கே உரிய மரம், நகரத்தைச் சுற்றி கணக்கில் அடங்கிவிடும் எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. முன்பொரு காலத்தில் புரசு மரங்கள் நிறைந்ததே புரசைவாக்கம், இன்று வெறும் தல விருட்சமாக அங்குள்ள ஆலயத்தில் மட்டுமே உள்ளது.இப்படி எந்த விபரமும் கூலிக்கு வந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
       புரசின் தலையில் மண் விழுந்தது, நீர்வனத்திற்கு இடியாய் விழுந்தது. புரசு மாண்டது, பல சவால்களை சமாளித்து வளர்ந்த பிள்ளை கொலை செய்யப்பட்டது. இனி ஒரு பிள்ளை இப்படி அழிக்கப் பட க்கூடாது. நகரை நகர்த்துவோர் எதுவும் செய்ய முடியும் ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தி, நடைபாதை அமைத்து…… எதுவும் செய்ய முடியும். அதுபோல் இவை அனைத்தும் வளமாய் பல காலம் இருக்க கரையருகே வளர்ந்து வரும் வனமும் தேவை.
         புரசு தன்னைக் கொடுத்து வரப்போகும் ஒரு ஆபத்தை நமக்கு அறிவுருத்தியள்ளது. தக்க நடவடிக்கைகள் இல்லையேல் பிள்ளைகளாய் வளர்த்த பல தாவரங்களை நாம் இழக்க நேரிடும். இது ஒரு சிலரால் மட்டும் முடியாது.
     ஊரின் கவனத்தை ஈர்க்குமா புரசின் மரணம்.
                                   Hareesh Aravindakshan.

3 comments:

  1. Good post Harish. Very true and well scripted. Hope this creates much needed awareness in all of us to live a life aligned with nature.

    ReplyDelete
  2. Right info at the right time Hareesh. Well articulated. Really it's time.for us to wake up...

    ReplyDelete
  3. Very thoughtful. Let's hope for change.

    ReplyDelete